×

கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம் எதிரொலி ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு? சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’

திருமலை: கர்நாடகா வில் கூட்டணி கட்சி எம்.பியின் ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண் ஆகியோர் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், பாஜ மற்றும் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் மற்றொரு அணியாகவும், காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

கூட்டணி இல்லாமல் 3வது முறையாக தேர்தல் களம் காணும் முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தொகுதிகளிலும் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆங்காங்கே பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் சந்திரபாபு தலைமையிலான பாஜ, ஜனசேனா கூட்டணியினர் இதுவரை வலுவான பிரசாரத்தில் ஈடுபடவில்லை எனக்கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளும், 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 தொகுதிகளும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த தொகுதிகளில் நட்சத்திர பேச்சாளர்கள் இதுவரை பிரசாரம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பலமுறை வந்து பிரசாரம், ரோடு ஷோக்களை நடத்தினார்.

ஆனால் ஆந்திராவில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அமராவதியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தெலங்கானாவில் பிரசாரம் செய்த நிலையில் ஆந்திராவில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டாமல் புறக்கணித்து வருகிறார். இதேபோன்று பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இதுவரை ஆந்திராவில் சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு கூட பிரசாரம் செய்ய முன்வரவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். இனி, பாஜ தலைவர்களை நம்பியிருந்தால் வெற்றி கிடைக்காது என்பதால் சந்திரபாபு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் பாஜ போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் பிசுபிசுத்துள்ளது.

இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், அண்டை மாநிலங்களில் பலமுறை ரோடு ஷோ, பிரசாரம் என பிரதமர் மோடி வந்து சென்றார். அதே ஆர்வத்தை ஆந்திராவில் காட்ட மறுக்கிறார். பிரசாரத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆந்திராவுக்கு வந்து பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. தற்போது வரை பிரசாரம் குறித்த திட்டத்தை தெரிவிக்கவில்லை. தேர்தல் அறிக்கையை சந்திரபாபு நாயுடு வெளியிடும்போது பாஜக நிர்வாகி அனைவரின் முன்னிலையில் வாங்க மறுத்து ஒதுங்கினார். கர்நாடகாவில் பாஜ கூட் டணியில் உள்ள மத சார்பற்ற ஜனதா தள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரதமர் மோடிக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தயக்கம் காட்டலாம் என தெரிகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

The post கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம் எதிரொலி ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு? சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’ appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Modi ,Amit Shah ,Andhra Pradesh ,Chandrababu ,Pawan Kalyan ,Tirumala ,Andhra ,Chandrababu Naidu ,PM Modi ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்